சனி, 31 டிசம்பர், 2016

பொய்த்தது  பருவம்! 



பொய்த்தது  பருவம்...
பணமும்  செல்லாக்காசாய்!
வீழ்ந்தது பொருள்... ஆதாரம்!

வற்றிய ஆறும், வாய்காலும்...
வறட்சியின் உக்கிரம்.

நட்ட நாற்றும், கதிர்களும்
கருகும் அவலம்...
கழனிகளின் கதி!

உழவன் வயிற்றில் அனல் கொதிப்பு
நிலத்தின் வெப்பத்தை விட....

சேற்றில் இறங்கி,
சோறு படைப்பவனுக்கு
கஞ்சிக்கே கதியற்ற நிலை!

வெம்மிய   இதயம்,
வெடித்து அடங்குது
வயல்வெளிப் பரப்பில்....
விவசாயம் வீழ்ந்த வேதனையில்.....

வாடிய பயிர்களை கண்டு
வாடினேன் என்ற
வள்ளலார் போல்
இங்கு யாரும் இல்லை
 
பெப்சியும் கோலாவும்
இன்ன பிற
பிட்சா - பர்கர் போதும்,   என

நாட்டை ஆள்பவர்களும்
நதி நீர் பங்கீட்டில்....
வாக்கு வங்கி
ஆதாய கணக்கில்.....

இயற்கையை அழித்தோம்,
இன்னும் இருப்பதையும்...
சுரண்டி சுருட்டுவோம்... என

காசே தான் கடவுளடா
என,  காலில் வீழ்ந்து
அரசியல் வியாபார,
லாப நஷ்ட, கூட்டல் கழித்தலில்...

வீழ்கின்ற
விவசாயின் பிணங்களுக்கு
விலை தர வருவார்கள்
புகைப்படக் காரர்களுடன்

விழா எடுத்து
வறட்சி நிவாரணமும்
வரிசையில் நிறுத்தி,  தருவார்கள்...
கொண்டாட்டமாய்!

ஏதோ இவர்கள், அப்பன்
வீட்டு சொத்திலிருந்து
தருவது போல....

மண் இல்லா
விண்வெளி-ஆராய்ச்சி மய்யத்தில்,
கீரையை பயிர் செய்து உண்கிறான்

கார் பொய்த்த விவசாயத்தை...
கவலையோடு சிந்தித்தால்...
இவ்வளவு விவசாயிகளின்
பிணங்கள் விழாது.

இந்தியா ஒரு விவசாய நாடு!
ஆம்! இந்தியா ஒரு விவசாய நாடு!!
சொல்லிப்
பெருமை பட்டுக்கொள்ள மட்டும்.
     -பிரேம்நசீர். 31-12-2016. 






























கருத்துகள் இல்லை: